Tuesday 24 July 2007

வேலைத்தேடி வளைகுடா நாடுகளுக்கு வருகின்றவர்களின் கவனத்தற்கு!

இன்றைய தலைமுறை பரவாயில்லை. பெருமளவில் கல்வி கற்கின்றார்கள்.
என்கிற சந்தோசத்தில் நம் சந்ததிகளின் எதிர்காலத்தை எண்ணி நாம் சற்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இருந்தாலும் இன்று நமது மாணவ சமுதாயம் அடைந்திருக்கின்ற முன்னேற்றம் இன்றைய நவீன யுகத்தின் வேகத்திற்கு இன்னும் ஈடு கொடுக்கவில்லை. அவ்விதம் ஈடு கொடுக்க வேண்டும் என்கிற ஆசை நம் ஒவ்வொருவர் உள்ளங்களிலிலும் நிறைந்திருக்கிறது.

வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பைத் தேடி வரும் இளைஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1.கல்வியும் கற்காமல், எந்தவித கைத்தொழிலும் தெரியாமல் எந்த வேலைக்கும் தயார் என்று வேலைத் தேடுபவர்கள்.

2.இன்றைய தேவைக்குகந்ததை கல்லாத பட்டதாரியாக, பணி அனுபவமில்லாமல் சரியான ஆங்கில உரையாடல் தெரியாமல் திணறிக் கொண்டு முடிந்தவரை படிப்புக்கு தகுந்த வேலையைத் தேடி கிடைக்காமல் அலுத்துப் போய் எந்த வேலைக்கும் தயார் என்கிற நிலைக்கு தங்களை தயார் படுத்திக் கொள்பவர்கள்.

இரண்டாவது வகையை சார்ந்தவர்களைப் பார்த்து ஆதங்கப் பட்டுக் கொண்டிருக்கின்ற கல்லாத உள்ளங்கள் கற்ற இளம் சகோதரர்களின் நிலை உயர்ந்தாக வேண்டும், தற்போது கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றவர்களின் எதிர் காலம் உன்னதமானதாக விளங்க அவர்கள் சரியாக தயாராக வேண்டும் என்கிற ஆவலுடன் அதற்கான தீர்வுகளையும், வழிக்காட்டுதல்களையும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் வழங்க வேண்டும் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இளம் பட்டதாரிகளில் பெரும்பாலோர் இன்றைய நவீன உலகிற்கு மிகவும் தேவையானவற்றைக் கற்பதில்லை. பொதுவாகவே ஆங்கில உரையாடலில் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றார்கள் என்பதுதான் எல்லோராலும் அக்கறையுடன் சுட்டிக்காட்டப் படுகின்ற உண்மை நிலை.

இன்றைய அதிவேக உலகம் கற்பனைக்குதிரையின் வேக ஓட்டத்திற்கேற்ப கடலைத் தூர்த்து கனவு நகரங்களைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது.
முன்னேறும் நாடுகள் பலவற்றிலும் கட்டுமானப் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.ஒரு ஊரின் மக்கள் தொகையையை ஓரிரு கட்டிடங்களில் நிரப்புகின்ற வகையில் அழகியக் கலைநுட்பத்துடன் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன புதுப்புதுக் கட்டிடங்கள்.
பல்லாயிரக் கணக்கான வல்லுநர்கள் குழுவாக சாதனைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும் கட்டிடக்கலை நிபுணர்களுக்கு இன்னமும் வேலைவாய்ப்பு சந்தையில் வாய்ப்புகள் ஏராளம். சம்பளம் மற்றும் சகல வசதிகளும் தாராளம்.

ஆம். இன்றைய இளம் மாணவர்கள் எதைப் படிக்கலாம் என்று கேட்டால் ‘கட்டிடக்கலைப் பொறியியல்’ என்றுதான் எங்கும் விடை கிடைக்கின்றது.

இந்தியா உள்பட எல்லா நாடுகளிலுமே இந்த கல்விக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இன்னும் ஆங்கில உரையாடல் குறைப்பாட்டை எப்படி நீக்குவது?
இன்றைக்கு ஆங்கில உரையாடல் பயிற்சிக்கு அநேக வழிமுறைகள்
அறிமுகப் படுத்தப் பட்டாலும் பெரும்பாலும் ஆங்கில மொழியின் இயல்பான நடையிலிருந்து மாறி நமது மொழியின் இயல்பு நடையை அப்படியே மொழிப் பெயர்த்து பேசுவதாகத்தான் அவை அமைகின்றன.இந்த குறைபாடுதான் நாம் ஆங்கிலத்தில் பின்தங்கிய நிலையிலிருப்பதற்கான அடிப்படைக் காரணம்.

சிறந்த வார்த்தை மற்றும் வாக்கிய அமைப்புகளை அறிந்து பயிற்சி பெற ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாவலாசிரியர்களின் நாவல்களை படிக்கத் துவங்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் கற்றறிந்தவர்களிடம் கேட்டு அர்த்தங்களைப் புரிந்துக் கொண்டு பயிற்சி பெற்று பேசத் துவங்கும் போது நமது இளம் மாணவர்களின் ஆங்கில மொழியாற்றல் சுற்றியுள்ளவர்களை, ஏன் அவர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்
காலத்தை வீணாக்காமல் அதற்கான முயற்சியை இன்றே, இப்போதே துவக்க வேண்டும்.

சமுதாயம் என்னும் ஆலமரத்தைத் தாங்கும் விழுதுகளாய் மாணவர்கள் உறுதியுடன் வாழ்க்கையின் வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.

நன்றி: நீடூர்-நெய்வாசல்

No comments: